டுகாங்க் பே, ஆஸ்திரேலியா: மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டுகாங்க் பே என்ற இடத்தில் முதலையிடம் சிக்கிய 23 வயது இளம் பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டு விட்டது. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவரை அவரது நண்பர்கள் மீட்டனர்.
அந்தப் பெண்ணின் பெயர் தாரா ஹாக்ஸ். பார்க்க படு அழகானவர். இவர் டுகாங்க் பே என்ற சுற்றுலாத் தளத்திற்குச் செல்லும் சொகுசுக் கப்பலில் பணியாளராக பணியாற்றி வருகிறார். கப்பல் பயணத்தின்போது அவர் தனது வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலை சந்திக்க நேரிட்டு விட்டது.
அங்குள்ள குளம் ஒன்றில் அவர் இறங்கி நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு முதலை வந்து விட்டது. வந்த முதலை, படு வேகமாக தாராவின் காலைக் கவ்விக் கொண்டது.
கால் முதலையின் வாயில் சிக்கியதைப் பார்த்து அலறித் துடித்தார் தாரா. அய்யோ, செத்தேன் என்று பயத்தில் அவர் அலறினார். முதலையும் தாராவின் காலை மெதுவாக வாய்க்குள் இழுக்க ஆரம்பித்தது.
இதைப் பார்த்து ஓடி வந்தார் தாராவின் நண்பர் ஆலன். முதலையின் வாயைப் பிடித்து பிரிக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இதையடுத்து முதலையின் கண்களில் சரமாரியாக அவர் குத்தினார். இதில் முதலை நிலை குலைந்து வாயைத் திறந்து பின்வாங்கியது. அதன் பின்னர் ஆலனும், இன்னொருவரும் சேர்ந்து பலம் கொண்ட மட்டும் முதலையைப் பிடித்து இழுத்தனர். அதில் பயந்து போன முதலை வேகமாக தண்ணீருக்குள் ஓடி விட்டது.
உடனடியாக சொகுசுக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம் தாராவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். அவரது கால் அதிர்ஷ்டவசமாக பெரும் காயமின்றித் தப்பியது. இருப்பினும் காலில் பல இடங்களில் முதலையின் பல் பட்டதால் காயம் ஏற்பட்டுள்ளது. தொடைப் பகுதியில்தான் காயம் அதிகமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
சற்று தாமதித்திருந்தாலும் தொடையிலிருந்து முழுக் காலையும் முதலை சாப்பிட்டிருக்கும், ஒரு காலையே தாரா இழந்திருப்பார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கர அனுபவம் குறித்து தாரா கூறுகையில், காலை நீரில் வைத்து நான் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நான் உள்ளுக்குள் இழுக்கப்பட்டேன். பிறகுதான் தெரிந்தது என்னை இழுத்தது ஒரு முதலை என்று. சிரமப்பட்டு நான் வெளியே வந்து தலையை தூக்கி முதலை முதலை என்று கத்தினேன். ஆனாலும் அது விடாமல் மீ்ண்டும் இழுத்தது. ஏதோ டெடி பியர் பொம்மையை வைத்து விளையாடுவது போல என்னை மேலும் கீழுமாக இழுத்து விளையாடியது.
அது எனது காலை பிடித்திருந்ததே ஒழிய கடிக்கவில்லை. ஆனால் அதன் பற்கள் எனது காலில் ஆழமாக புதைந்து வருவது போல தோன்றியது. மேலும் நான் சாகப் போகிறேன் என்றுதான் நினைத்தேன். ஆனால் எனது நண்பர்கள் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றி விட்டனர் என்றார் தாரா.
0 comments:
Post a Comment