பெங்களூர்: பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்த பெண் கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் என்னும் மனநலப் பிரச்சனைக்காக கடந்த 7 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்குள் போலி ஐடி கார்டை காட்டி நுழைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதான அகமதாபாத் பெண் பியூலாவுக்கு கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் என்னும் மனநலப் பிரச்சனை உள்ளது. அவர் இந்த பிரச்சனைக்காக கடந்த 7 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். கிராண்டியோஸ் டிஸ்ஆர்டர் பிரச்சனை உள்ளவர்கள் தாஙகள் பிரபலமானவர்கள் என்றும், பணக்காரர்கள் என்றும், சக்தி படைத்தவர்கள் என்றும் தங்களைப் பற்றி மிகவும் உயர்வாக நினைத்துக்கொள்வார்களாம்.
இந்நிலையில் பியூலா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இஸ்ரோவுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது. பியூலா கேரள மாநிலத்தில் உள்ள புணலூரில் இருக்கும் ஜனா போட்டோ ஸ்டுடியோவில் போட்டோ எடுத்துள்ளார். அங்கிருந்து தான் அவர் போலி ஐடி கார்டு தயாரித்துள்ளார். இதையடுத்து கர்நாடக போலீசார் கேரளா சென்று அந்த போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் சினி பாலனை விசாரித்தனர்.
விசாரணையில் பாலன் கூறுகையில், பியூலா எனது ஸ்டுடியோவுக்கு வந்து போட்டோ எடுத்து அதை ஒரு கார்டில் வைத்து லேமினேஷன் செய்தார். ஆனால் அது என்ன கார்டு என்று எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார். புணலூரில் உள்ள ஸ்பார்க் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரிடமும் கர்நாடக போலீசார் விசாரித்து வருவதாக கொல்லத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர பியூலாவுக்கு உதவிய இஸ்ரோ என்ஜினியரிடம் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கர்நாடக போலீஸ் தனிப்படை அகமதாபாத்தில் உள்ள பியூலாவின் வீட்டுக்கு நேற்று சென்று விசாரணை நடத்தியது. அவரது குடும்பத்தார் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரது கணவர் அலெக்ஸ் தாமஸ் அகமதாபாத்தில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ளார். அங்கும் சென்று போலீசார் விசாரித்தனர்.
பியூலா படிக்கும் காலத்தில் விண்வெளி ஆய்வு விஞ்ஞானியாக வேண்டும் என்று விரும்பியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புணலூரில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள கூனம்குழிக்கு சென்ற போலீசார் அங்குள்ள பியூலாவின் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள பியூலா கடந்த 11ம் தேதி புணலூர் சென்றுள்ளார். அவர் பேருந்து மூலம் மும்பை வழியாக அகமதாபாத் செல்வதாகக் கூறிவிட்டு அங்கிருந்து கடந்த 18ம் தேதி கிளம்பியுள்ளார். ஆனால் அவர் அகமாதாபாத் செல்லாமல் பெங்களூர் வந்து இஸ்ரோ விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார்.
இதற்கிடையே பியூலாவிடம் நடத்திய விசாரணையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை என்று கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment